கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்

*கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்*

கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய காரணமாக இருக்கின்றன என்பதை பல சம்பவங்கள் நமக்கு தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன.

ஒருமுறை மதுரை மாநகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஓர் இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் நற்செய்தி அறிவிப்பதற்காக, _"தம்பி உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?"_ என்று கேட்டேன். அதற்கு அவர், _"என்னுடைய பழைய பெயர் *டேனியல்.* கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி இப்போது *ரமனுல்லா* என்று மாற்றியிருக்கிறேன்"_ என்றார். அவருடைய அந்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. _"நீங்கள் பிறந்ததே கிறிஸ்தவ குடும்பமா?"_ என்று கேட்டேன். _"இல்லை ஐயா! நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன்; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். இந்துவாக இருக்கும்போது சாதி துவேஷக் கொடுமைகளை அனுபவித்தேன்.
அந்த அவமானச் சாக்கடையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் எங்கள் கிராமத்துக்கு ஊழியம் செய்ய வந்தார்கள். இயேசுவின் அன்பைப்பற்றி உருக்கமாக பேசினார்கள். 'உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்; உங்கள் நிந்தையை இயேசு நீக்குவார்' என்று அற்புதமாக பாடினார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி மிகவும் மேன்மையாக பேசிய வார்த்தைகளை அப்படியே நம்பி, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக்கு மாறினால் என்னுடைய பிரச்சனைக்கு முடிவுகாலம் உண்டாகும் என்று நினைத்து அவர்களுடைய திருச்சபைக்கு குடும்பமாக போனோம்.
சபையார் எல்லாருடைய வீடுகளையும் அந்த பாஸ்டர் சந்திக்கும் வழக்கம் உண்டு. ஆனால், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களானதால் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. ஆனாலும் நாங்கள் கொடுக்கும் காணிக்கைகளை சந்தோஷமாக வாங்கிக்கொள்வார். காசு விஷயத்தில் அவருக்கு தீண்டாமை கிடையாது. ஆக, கிறிஸ்தவத்துக்கு வந்தாலும் என் துக்கம் சந்தோஷமாக மாறவில்லையே என்ற விரக்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது, இஸ்லாத்தைப் பற்றியும் சமூக சமத்துவத்தைப் பற்றியும் ஒரு நண்பர் என்னிடம் பேசினார். அதன்பின் அவர் என்னை மூத்த இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். இப்போது அவர்கள் எந்த பாகுபாட்டு மனப்பான்மையும் இல்லாமல் என் வீட்டுக்கு வருகிறார்கள். நாங்கள் கொடுப்பதை மகிழ்ச்சியோடு உண்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போகும்போது எங்களை உறவினர்களைப்போல நினைத்து நடுவீட்டில் அமரவைத்து உணவு பரிமாறுகிறார்கள். இப்போது நாங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சியோடு இருக்கிறோம்"_ என்றார்.

இதுபோன்ற சாதிவெறி ஊழியர்களைப் பார்த்து _"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்த்துவிடவேண்டும் என்று நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத்தேயு 23:13-15)_ என்று ஆண்டவர் கூறுகிறார்.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர் *முகமது அலி* இஸ்லாமியராக மாறுவதற்குமுன் அவரது பெயர் *கேஸியஸ் மார்செலஸ் கிளே (Cassius Marcellus Clay)* என்று இருந்தது. அவர் இஸ்லாமியராக மாற பெரிய காரணம் தன்னோடிருந்த வெள்ளைத்தோல் அமெரிக்கர்களின் இனவெறி என்று அலி தனது காணொளிகளில் பதிவு செய்திருக்கிறார்.

ஒருதாய் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழவேண்டிய நமக்குள் கேவலமான ஜாதி, இன வேறுபாடுகளை வைத்துக்கொண்டு 'இயேசு நல்லவர்' என்று விளம்பரம் செய்துகொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இயேசு கிறிஸ்து நல்லவர் என்று புரியவைப்பதால் மட்டும் மக்கள் மாறிவிடுவார்களா? இது நம்மை நாமே ஏமாற்றும் கோமாளித்தனம் அல்லவா!

'இயேசு நல்லவர்' என்று ஆயிரம் தடவை நாம் நம் வாயால் சொல்வதைவிட 'கிறிஸ்தவர்களின் கடவுள் நல்லவர்' என்று பிறர் சொல்லுமளவுக்கு நாம் வாழ்ந்துகாட்டுவதல்லவா இயேசுவுக்கு புகழ்ச்சியை தரும்!

1981-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 19-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவிலுள்ள *மீனாட்சிபுரம்* என்னும் கிராமத்திலுள்ள 900 இந்து தலித் மக்கள் ஒரே நாளில் இஸ்லாமியர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த கிராமத்தைச்சுற்றி பல கிறிஸ்தவ சபைகள் இருந்தாலும், அந்த மக்கள் ஏன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை? தங்களை சாதிக் கொடுமையிலிருந்து மீட்கும் வலிமையுடைய மீட்பராக சர்வ சக்தி படைத்த இயேசுவிடம் ஏன் அடைக்கலம் புகவில்லை? அந்த மக்கள் எதிர்பார்த்த அன்பு, சமத்துவம், சகோதரத்துவம்  என்பவற்றை கிறிஸ்தவத்தில் பெறமுடியாது என்று கண்டுபிடித்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள் கொடிய சாதி வெறியர்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்துவாக இருக்கும்போது எந்த சாதிப்பெயரால் அவமானப்பட்டு கிடந்தார்களோ அந்த சாதி இழிவிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறினாலும் விடுதலை கிடைக்கப்போவதில்லை என்று தீர்மானித்து இஸ்லாத்துக்கு போயிருக்கவேண்டும் என்றே நம்புகிறேன். வேறு என்ன காரணம் இருக்கப்போகிறது?

மீனாட்சிபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவத்திற்கு மாறிய *ராமைய்யா* என்பவர் கிறிஸ்தவத்திற்கு மாறியதால் தனக்கு *ராசைய்யா* எனப் பெயர் சூட்டிக்கொண்டார். ஆனால், அங்கேயும் சாதியின் பெயரால் இழிவும் கொடுமையும் தொடர்ந்ததால் அவர் கிறிஸ்தவத்தைவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது *இப்ராகிம்* எனப் பெயர் சூட்டியிருக்கிறார். ராமைய்யா ராசையாவானார். ராசைய்யா இப்ராகிமானார். அவர்தான் அங்கு கட்டப்பட்ட மசூதிக்கு முதல் முத்தவல்லி.

ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழக தலைவராக இருந்த IAS அதிகாரி *உம்ரா சலோதியா* தலைமை செயலாளர் பதவிக்கு முயற்சி செய்தபோது அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராதலால் அந்த வேலையில் புறக்கணிக்கப்பட்டதால், அவர் இஸ்லாத்துக்கு மாறினார்.

சென்னையில் வாழ்ந்த பேராசிரியர் *பெரியார் தாசன்* என்ற நாத்திகர் கிறிஸ்தவத்தில் காணப்படும் சாதிப் பாகுபாடுகளாலேயே கிறிஸ்தவத்துக்கு வரமுடியாமல் இஸ்லாத்தை தழுவினார் என்று தன் காணொளிகளில் பதிவு செய்திருக்கிறார்.

நாகப்பட்டினத்திலுள்ள பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தில் 180 இந்து தலித் மக்கள் தங்கள் கடவுளை வணங்க, தங்கள் கோயிலுக்குள் நுழைய, ஆதிக்கவாதிகளால் அனுமதி மறுக்கப்பட்டபோது, _"நாங்கள் இஸ்லாமியர்களாக மாறப்போகிறோம்"_ என்று அறிக்கை விடுத்தார்கள். இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக இஸ்லாத்துக்கு மதம் மாற முடிவு செய்துள்ளனர் என்று செய்தித்தாளில் வாசித்தேன்.
அவர்கள் இந்துத்துவ சாதிவெறியால் பாதிக்கப்பட்ட போது சமத்துவ அன்பைத்தேடி கல்வாரி நேசர் இயேசுவிடம் அல்லவா வந்திருக்கவேண்டும்! அவர்கள் இங்கே வந்தாலும் கிறிஸ்தவ சாதிவெறியர்கள் அவர்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அண்மையில் மதுரைக்கு அருகிலுள்ள பேரையூரில் உள்ள சந்தையூர் என்னும் கிராமத்தில், 200 'அருந்ததியர்' மக்கள் தீண்டாமைக் கொடுமையால் இஸ்லாம் மதத்துக்கு மாற தீர்மானித்தனர். இவர்கள் வருத்தப்பட்டு சுமக்கும் சாதிச்சுமையை இயேசு கிறிஸ்துவிடம் அல்லவா இறக்கி வைத்திருக்கவேண்டும்! எங்குமே அவர்களுக்கு கிடைக்காத உளவியல் இளைப்பாறுதல் இயேசு கிறிஸ்துவிடம் அல்லவா கிடைத்திருக்கவேண்டும்!
_"நாங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம்; இரட்சிக்கப்பட்டோம்; அக்கினி அபிஷேகம் பெற்றோம்; ஆவியில் நிரம்புகிறோம்; அன்னிய பாஷையில் பேசுகிறோம்; துதி ஆராதனை செய்கிறோம்; நடனமாடுகிறோம்; ஆவியில் சிரிக்கவைக்கிறோம்; ஆவியில் மயங்கவைக்கிறோம்; தீர்க்கதரிசனம் சொல்கிறோம்; நோய்களை குணப்படுத்துகிறோம்"_ என்று கிறிஸ்தவர்கள் பெருமையாக பேசுவதுபோல இஸ்லாமியர்கள் பெருமையாக பேசி நான் பார்த்ததில்லை. இயேசுவின் மரணத்தால் இரட்சிக்கப்படாத அவர்கள் மௌனமாக செய்யும் சகோதரத்துவப் புரட்சியை பாராட்டாமல் இருக்கமுடியாது. 'இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்பவரைவிட இரட்சிக்கப்படாதவர்கள் மேன்மையான வாழ்க்கை வாழும்போது இந்த 'பெரிய' இரட்சிப்புக்கு என்ன மதிப்பை மக்கள் கொடுப்பார்கள்?
இஸ்லாமியர்களுக்குள் பிரிவினைகளும் பாகுபாடுகளும் இருக்கின்றனவே!" என்று உடனே கேள்வி கேட்டு நாம் செய்யும் இந்த பெருந்தவறை நியாயப்படுத்தக்கூடாது. இஸ்லாமியர்களுக்குள் *ஷியா, சன்னி, கவரிஜ், இபாதி, அஹமதியா* என்று சில கொள்கைப் பிரிவுகளும், *ஷேக், குரைஷி, கான், கலீபா, லெப்பை, மாப்பிளை, அன்சாரி, சயீது, மரக்காயர், ராவுத்தர், பட்டான், நாயக்* என்று பல சமூக வேறுபாடுகளும் இருக்கின்றன. இவைகளை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், *ஆறுமுகசாமி நாடார்* கிறிஸ்தவராக மாறும்போது *ஆரோக்கியசாமி நாடாராக* மாறுகிறார். ஆனால், இஸ்லாமியராக மாறும்போது *அப்துல்லா நாடாராக* மாறுவதில்லை.

இந்துத்துவ நம்பிக்கையாளராக இருக்கும்போது *'இந்து பறையர்'* என்று அரசு பதிவேட்டில் எழுதப்பட்டது கிறிஸ்தவராக மாறியபின் *'கிறிஸ்தவ பறையர்'* என்று எழுதப்படும். ஆனால், இஸ்லாத்துக்குப் போனால் *'இஸ்லாமிய பறையர்'* என்று எழுதப்படுவதில்லை. இது இஸ்லாமியர்கள் இந்துத்துவ வர்ணாசிரம அடிமைத்தன கொள்கையை நிஜமாகவே வெறுக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்துவாக இருக்கும்போது இருந்த இன இழிவு கிறிஸ்தவராக மாறியபின்பும் அகலாவிட்டால் கிறிஸ்தவத்துக்கு என்ன சிறப்பான மதிப்பு கிடைக்கப்போகிறது? கிறிஸ்தவத்தில் அந்த இந்துத்துவ சாதி அடையாளம் அவரைவிட்டு மறையாது என்பது மறைக்கமுடியாத வரலாற்று உண்மை அல்லவா! இதற்கு காரணம் சாதியம் என்னும் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது என்று கிறிஸ்தவ போதகர்கள் யாரும் போதனை செய்வதில்லை. காரணம் போதகர்களே சாதி உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஆனாலும், தாங்கள் கடைபிடிக்காத சமத்துவ கொள்கையை அவர்கள் பிறருக்கு போதிக்காமல் இருப்பதற்காகவே கிறிஸ்தவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையாக இயேசு கிறிஸ்து தன் உயிரையே கொடுத்தார்" என்னும் புனிதமான உண்மையை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வ தில்லை. ஏனென்றால், இயேசு மனுக்குலத்தின் மீட்புக்காக கொல்லப்பட்டார் என்னும் ஆன்மீக உண்மையை இஸ்லாமியர்களின் மதநூல் குரான் மறுக்கிறது. இயேசுவை பாவிகள் கொன்றுவிடும் அளவுக்கு தன் தீர்க்க தரிசியை இறைவன் கைவிடமாட்டார் என்று அவர்கள் கருத்து கூறுகிறார்கள். ஒரு கோணத்தில் அந்த கருத்து நியாயமானதாகவே தெரியும். "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்iல் உன்னைக் கைவிடுவதுமில்லை (யோசுவா 1:5) என்று சொன்ன கடவுள், தன் மகனை  இப்படிப்பட்ட கொடிய மரணத்துக்கு எப்படி விட்டுக் கொடுப்பார்? என்று நியாயமாக நாம் சிந்திக்கலாம். ஆனால், கிறிஸ்து மனிதர்கள் செய்த, செய்துகொண்டிருக் கின்ற, செய்யப்போகின்ற பாவங்களுக்காக பலியாவதற் காக வந்தவர் என்னும் உண்மையை இஸ்லாமியர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. கடவுள் மனிதன்மேல் வைத்த அன்பை தன் மரணத்தின்மூலம் மனிதனுக்கு விளங்கப் பண்ண வந்த அற்புதப்பிறவிதான் இயேசு கிறிஸ்து என்னும் உண்மையை இஸ்லாமியர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
இயேசுவின் மரணத்தை புரிந்துகொள்ளாதவர்கள் கடவுள் மனிதனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது. கடவுளின் பண்பை பற்றிய தெளிவில்லாத இஸ்லாமியர்களுக்குள் சாதி இருந்தால்கூட அதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், மனிதனுக்கு அன்பு என்றால் என்ன என்று கற்றுக்கொடுப்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்த இயேசுவின் அன்பை ருசித்த கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பாகுபாடுகள் இருக்கலாமா? நிச்சயமாகவே அந்த கொடுமையை சகிக்கமுடியாது.
நம்மை பாவ சேற்றிலிருந்து மீட்க வந்த இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் வாசனையின் வீரியத்தைவிட, சாத்தானால் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவரப்பட்ட சாதிய துர்நாற்றத்தின் வீரியம் அதிகமாகிவிட்டதால் இறையரசின் வாசலுக்கு வரும் புதியவர்கள் சாதிநாற்றத்தை தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள்.
_"பூலோகத்தில் சாதி பாகுபாடுகளை கடைபிடிக்கும் கிறிஸ்தவர்கள், பரலோகத்துக்கு போனால் அங்கு இவர்கள் சமத்துவ சிந்தையோடு வாழ்வார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?_ என்று ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் கேள்வி கேட்கிறார்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை